முக்கிய செய்தி
அரசமைப்புச் சட்டத்தையும், சட்டமன்ற மரபையும் மீறிய தகுதிக்கு பொருந்தாத ஆளுநரை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக திரும்ப பெற வேண்டும். நவாஸ்கனி எம்பி கண்டனம்.

நவாஸ்கனி எம்பி கண்டனம்.
--
தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுடன் எந்த வகையிலும் பொருந்தாமல், தகுதிக்கு பொருந்தாத வகையில் பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வரும் ஆளுநரை ஒன்றிய அரசு தாமதம் இன்றி உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நிறைந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசினால் தயாரிக்கப்பட்ட உரையை எந்தவித மாறுதல் மற்றும் திருத்தங்கள் இன்றி அப்படியே வாசிப்பது தான் கவர்னர் உரையின் மரபு.
அரசமைப்புச் சட்டம் அவருக்கு தந்த உரிமையின்படி தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்களை முன்மொழிவது மட்டுமே அவரது கடமை.
ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையில் அத்தகைய மரபை மீறி தகுதிக்கு பொருந்தாமல் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆளுநர் ரவி.
திராவிட மாடல் ஆட்சி என்ற வார்த்தையை உச்சரிக்காமல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல், தமிழ்நாடு அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வார்த்தைகளையும் தவிர்த்து இருக்கிறார் ஆளுநர்.
இது அவரது உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது.
வரம்பு மீறி செயல்படும் அவரது இத்தகைய செயல் கடுமையான கண்டனத்துக்குரியது.
ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆளுநர் ரவி.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களை கிடப்பில் போட்டு, தன்னுடைய பணியை மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர், தற்போது சட்டப்பேரவையின் மரபையும் மீறி தன்னுடைய தகுதியையும் மறந்து செயல்பட்டு வருவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததல்ல.
எனவே தகுதிக்கு பொருந்தாத ஆளுநர் ரவியை எந்தவித தாமதமும் இன்றி ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற்று தமிழ்நாடு மக்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
--
கே நவாஸ்கனி
மாநில துணைத்தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.